செய்திகள்
மழை

தாராபுரம் பகுதியில் பலத்த மழை- குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2021-05-05 10:00 GMT   |   Update On 2021-05-05 10:00 GMT
தாராபுரம் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தாராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் மழை நீடித்தது.
திருப்பூர்:

அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கிய நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. இதனால் மழை வரும் என்று எதிர் பார்த்த நிலையில் மதியத்திற்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

இந்தநிலையில் இரவு திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தாராபுரம் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தாராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். நேற்றிரவு பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



Tags:    

Similar News