செய்திகள்
ஓமலூர் அருகே கோவிலில் திருட முயன்றவர் பிடிபட்டார்
ஓமலூர் அருகே அய்யனாரப்பன் கோவிலில் திருட முயன்ற நபரை அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஓமலூர்:
ஓமலூர் அருகே சரக்கபிள்ளையூர் கிராமம் சின்னநாகலூர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை 3 மணி அளவில் கோவில் நகைகளை ஒருவர் திருட முயற்சி செய்து கொண்டிருப்பதை அதே பகுதியை சேர்ந்த கோகுல்ராம் (வயது 19) என்பவர் பார்த்துள்ளார்.
இதையடுத்து கோகுல்ராம் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கோவில் நகைகளை திருட முயன்றவரை கையும் களவுமாக பிடித்து தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சேலத்தை சேர்ந்த குமார் (50) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.