செய்திகள்
கோவில்பட்டியில், வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை
கோவில்பட்டி சட்டசபை தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடியில் வரும் 2-ந் தேதி நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கையில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் அவசியம் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று டாக்டர் வனிதா தலைமையில் நர்ஸ் அமுத வேணி, லேப் டெக்னீசியன் கவிதா ஆகியோர் முகவர்களுக்கு பரிசோதனை நடத்தினார்கள் பரிசோதனையில் 105 முகவர்களும், 24 அலுவலர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்கள்.
இதேபோல நகரசபை அலுவலகத்தில் டாக்டர் ஸ்ரீராம் தலைமையில் மருத்துவ குழுவினர் 59 முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தார்கள். ஸ்ரீராம் நகர் நகர்நல மையத்தில் டாக்டர் மகேந்திரன் தலைமையில் நடந்த பரிசோதனை முகாமில் 69 முகவர்களுக்கும், 42 பொது மக்களுக்கும் பரிசோதனை செய்து கொண்டனர்.
கோவில்பட்டி கம்மவார் திருமண மண்டபத்தில் நடந்த கொரோனா பரிசோதனை முகாமில் டாக்டர் மனோஜ் தலைமையில் மருத்துவ குழுவினர் 100 பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தார்கள்.