செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா?- கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம்
ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
தூத்துக்குடி:
நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் நோயாளிகளுக்கு வழங்க ஆக்சிஜன் கிடைப்பதில்லை. எனவே ஆக்சிஜன் தயாரிப்பை தீவிரப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்தநிலையில் வேதாந்தா நிறுவனம், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் இடைக்கால மனு தாக்கல் செய்தது.
நேற்று இம்மனு மீதான விசாரணையின் போது, ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.
இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வேதாந்தாவின் இடைக்கால மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது குறித்து தூத்துக்குடியில் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.