செய்திகள்
நீண்ட தூரம் செல்லும் பகல் நேர பஸ்களில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே பயணம் செய்த காட்சி.

கோவையில் இருந்து வெளியூர் சென்ற பஸ்களில் கூட்டம் இல்லை

Published On 2021-04-20 09:21 GMT   |   Update On 2021-04-20 09:21 GMT
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கோவை:

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவில் இரவு நேரங்களில் வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவையும் இயங்க அனுமதி இல்லை.

இதனால் கோவை திருவள்ளுவர் பஸ் நிலையத்தில் இருந்து இரவு நேரங்களில இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இன்று முதல் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு காலை 7 மணி முதல் 11.30 மணி வரை பஸ்கள் இயக்கப்பட்டது.

அதன்படி பஸ் நிலையத்தில் 30 அரசு விரைவு பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப சென்னை, விழுப்புரம், நெல்லை, குட்டம், கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களான பெங்களூர், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கும் பஸ்கள் புறப்பட்டு சென்றன.

இதே அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இரவு நேர பஸ்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. மொத்தம் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட 140 பஸ்களில் 40 பஸ்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. 100 பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை பஸ்கள் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டது.

பயணிகள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் பஸ்சில் ஏறுவதற்கு முன்பு பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கை கழுவும் திரவம் மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னர் சமூக இடைவெளி விட்டு பஸ்சில் அமர வைக்கப்பட்டனர்.

ஆனால் கொரோனா அச்சம் காரணமாக பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

Tags:    

Similar News