செய்திகள்
விபத்து

மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்- தனியார் நிறுவன அதிகாரி பலி

Published On 2021-04-17 13:13 GMT   |   Update On 2021-04-17 13:13 GMT
எல்லீஸ்நகர் மேம்பாலத்தில் சரியாக தடுப்புகள் வைக்கப்படாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க தடுப்புகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை:

மதுரை மேலமாசி வீதி நன்மை தருவார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காமாட்சி மணிவண்ணன் (வயது 58). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் தேயிலை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், காமாட்சி மணிவண்ணன் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

இதில் தூக்கி வீசப்பட்ட காமாட்சி மணிவண்ணன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். இதைப் பார்த்த பொது மக்கள் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த கோமதிநாயகம் மகன் சக்திவேல் (வயது18) என்பவரும் காயமடைந்தார்.

சக்திவேல் ஐ.டி.ஐ. படித்து முடித்து விட்டு எலக்ட்ரீசியனாக இருந்து வருகிறார். இவர் ஓட்டி வந்தது புது மோட்டார் சைக்கிளாகும்.

காயமடைந்த சக்திவேல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக நரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்லீஸ்நகர் மேம்பாலத்தில் சரியாக தடுப்புகள் வைக்கப்படாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க தடுப்புகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News