செய்திகள்
மாம்பழம்

மானாவாரி நிலங்களில் மாம்பழ சாகுபடி அதிகரிப்பு

Published On 2021-04-17 10:36 GMT   |   Update On 2021-04-17 10:36 GMT
தர்மபுரி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் மாம்பழ சாகுபடி அதிகரித்துள்ளது.
தர்மபுரி:

தமிழகத்தில் மாம்பழம் அதிக அளவில் பயிர் செய்யப்படும் பகுதிகளில் ஒன்றாக தர்மபுரி மாவட்டம் உள்ளது. மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி நிலங்களில் மாம்பழம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக பெங்களூரா, செந்தூரா, அல்போன்சா, நீலம், பங்கனபள்ளி ஆகிய ரகங்கள் கணிசமான அளவில் பயிரிடப்படுகின்றன. இவற்றில் பெங்களூரா மாம்பழங்கள் மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகின்றன.

இந்த நிலையில் இந்த ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மாம்பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாமரங்களில் மா பிஞ்சுகளும் அதிகம் காய்க்க தொடங்கி உள்ளன. பருவ மாற்றங்கள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத பகுதிகளில் மா மரங்களில் பூக்கள் காலதாமதமாக பூக்கும் நிலையும் காணப்படுகிறது.

இதுதொடர்பாக மாம்பழ சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மாம்பழ உற்பத்தித்திறன் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாறுபட்டு காணப்படுகிறது. இதன் காரணமாக சராசரியான உற்பத்தி நிலையை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்கும்.

ஏப்ரல் மாத இறுதியிலிருந்து ஆகஸ்டு மாதம் வரை மாம்பழ அறுவடை நடக்கும். தற்போது மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் பரவலாக மா மரங்களில் மா பிஞ்சுகள் அதிக அளவில் உள்ளன. மாம்பழ விளைச்சல் குறிப்பிடத்தக்க அளவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News