செய்திகள்
கோப்புபடம்

பெரம்பலூர் அருகே லாரி மோதி என்ஜினீயர் பலி - உறவினர்கள் சாலை மறியல்

Published On 2021-04-16 11:59 GMT   |   Update On 2021-04-16 11:59 GMT
பெரம்பலூர் அருகே லாரி மோதியதில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூரை அடுத்த வேப்பந்தட்டை தாலுகா அரசியலூரை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மகன் அமிர்தியாசன் (வயது 23). என்ஜினீயரிங் பட்டதாரி. அதே ஊரை சேர்ந்த முத்து ராஜேந்திரன் மகன் சுபாஷ்(20). நேற்று அமிர்தியாசன், சுபாஷ் ஆகிய 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் வந்துவிட்டு இரவில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

எசனை காட்டு மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது எதிரே ஆத்தூரில் இருந்து பெரம்பலூருக்கு வந்த டிப்பர் லாரி, அதே சாலையில் கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டரின் பின்புறம் மோதிவிட்டு, அமிர்தியாசன், சுபாஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் அமிர்தியாசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். பலத்த காயமடைந்த சுபாஷ் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அமிர்தியாசன் மற்றும் சுபாஷின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமைதிப்படுத்தினர். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News