கருமத்தம்பட்டி அருகே லாரி மீது கார் மோதல்- ஒருவர் பலி
கோவை:
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள எம்.வி. நகரை சேர்ந்தவர் விக்டர் விஜேந்திரன் ( வயது 55). அதே பகுதியை சேர்ந்த அஜய் ஆனந்த் (28), வைஷ்ணவி (28). ஆகியோர் ஒரு காரில் சேலம் -கோவை ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். காரை விக்டர் விஜேந்திரன் ஓட்டிச் சென்றார். கார் கருமத்தம்பட்டி அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரை ஓட்டிச் சென்ற விக்டர் விஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
காரில் சென்ற அஜய் ஆனந்த், வைஷ்ணவி ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த தகவல் கிடைத்ததும் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான விக்டர் விஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.