செய்திகள்
கொள்ளை

அரசு டாக்டர் வீட்டில் நகை- பணம் கொள்ளை

Published On 2021-04-16 08:03 GMT   |   Update On 2021-04-16 08:03 GMT
விழுப்புரத்தில் அரசு டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் அரசு ஊழியர் நகர் வ.உ.சி. தெரு பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது 31). இவர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு வேலைக்குச் சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நள்ளிரவில் கோகுல்ராஜ் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மறுநாள் காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோகுல்ராஜ் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக இது குறித்து கோகுல்ராஜ்க்கு தகவல் தெரிவித்தனர்.

அரியலூரில் இருந்து கோகுல் ராஜ் புறப்பட்டு விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை- பணம் கொள்ளை போயிருந்தது.

இதுகுறித்து விழுப்புரம் போலீசில் கோகுல்ராஜ் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

வீடு புகுந்து நகை -பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News