செய்திகள்
கைது

பெரம்பலூரில் வன விலங்குகளை விற்ற வாலிபர் கைது

Published On 2021-04-15 13:30 GMT   |   Update On 2021-04-15 13:30 GMT
பெரம்பலூரில் வன விலங்குகளை விற்பனை செய்த வாலிபரை கைது செய்த வனத்துறையினர், இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள மற்ற 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் பகுதியில் உயிருடன் வன விலங்குகளை பிடித்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தலைமையில் வனத்துறையினர் நேற்று ரோந்து சென்றனர்.

அப்போது, பெரம்பலூர் வெங்கடேசபுரம் தனியார் பள்ளி பின்புறம் உள்ள குடிசை வீட்டில் இருந்து உயிருடன் வன விலங்குகள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு உயிருடன் இருந்த 7 முயல்கள், 4 கானாங்கோழிகள், 4 புனுகு பூனைகள், ஒரு காட்டுப் பூனை, ஒரு கவுதாரி ஆகியவற்றை வனத்துறையினர் மீட்டனர்.

விசாரணையில் சேலம் மாவட்டம், அயோத்திபட்டினம் குப்பமேட்டை சேர்ந்த கந்தசாமி மகன்கள் பரமசிவன், அச்சம் (வயது 32), அதே பகுதியை சேர்ந்த எஜமான், துரை ஆகியோர் வன விலங்குகளை பிடித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர் வன உயிரினச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அச்சம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவான பரமசிவன், எஜமான், துரை ஆகிய 3 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். உயிருடன் மீட்கப்பட்ட வன விலங்குகள் சிறுவாச்சூர் வனக்காப்பு காட்டில் விடப்பட்டது.
Tags:    

Similar News