செய்திகள்
விபத்து

சேலத்தில் போலீஸ் ஜீப் மோதி வெள்ளிப்பட்டறை தொழிலாளி பலி

Published On 2021-04-13 08:32 GMT   |   Update On 2021-04-13 08:32 GMT
சேலத்தில் இன்று காலை போலீஸ் ஜீப் மோதி வெள்ளிப்பட்டறை தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் செவ்வாய்ப்பேட்டை மூலபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் என்கிற பாண்டியன் (வயது 40). வெள்ளி தொழிலாளி.

இவர், சேலம் சிவதாபுரம் பகுதியில் தங்கி இருந்து வெள்ளிப்பட்டறையில் வெள்ளி கால் கொலுசு, மெட்டி உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்கள் தயாரிக்கும் பணி செய்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை தமிழ்செல்வன், செவ்வாய்ப்பேட்டை மாதா கோவில் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சரிந்து ரோட்டில் விழுந்தார்.

அப்போது அந்த வழியாக பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த போலீஸ் ஜீப், அவர் மீது ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. தமிழ்செல்வன் விழுந்த அடுத்த சில நொடிகளில் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தமிழ்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டு தமிழ்செல்வன் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது அவர்கள் கூறுகையில், போலீஸ் ஜீப் மோதிய சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க வேண்டி போலீசார், சம்பவ இடத்தில் பதிவான தடயங்களை அழித்ததாகவும், மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை அழித்து விட்டதாகவும் புகார் தெரிவித்தனர்.

இந்த வி‌ஷயம் உடனடியாக சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சந்தோஷ்குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News