கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரிப்பு
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 370 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது.
நாளை 2-வது ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதாலும், சிறு மொத்த விற்பனை கடைகள் இன்று முதல் செயல்படாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டதாலும் சில்லரை வியாபாரிகள் நள்ளிரவு முதல் வழக்கத்தை விட அதிகளவில் மார்க்கெட்டில் குவிந்தனர்.
இதன் காரணமாக கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வந்த காய்கறி விற்பனை பின்னர் காலையில் மந்தமானது.
தக்காளி, கேரட் உள்ளிட்ட காய்கறி லோடு ஏற்றி வந்த லாரிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் கால தாமதமாக மார்க்கெட்டுக்குள் வந்தது. இதனால் அவை அனைத்தும் விற்பனை ஆகாமல் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த பீன்ஸ் விலை இன்று மேலும் அதிகரித்து ஒரு கிலோ ரூ50-க்கு விற்கப்படுகிறது.
அதேபோல் சின்ன வெங்காயம், கத்தரிக்காய், வெண்டைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் கடந்த வாரத்தை விட இன்று கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து மொத்த வியாபாரி சுகுமார் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சந்தைக்கு காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகள் குறித்த நேரத்திற்குள் வந்து சேர முடியவில்லை.
மேலும் மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வரும் சில்லரை வியாபாரிகளும் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமித்து நெரிசலை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்றைய காய்கறி மொத்த விற்பனை விலை விபரம் கிலோவில் வருமாறு:-
தக்காளி- ரூ.8
வெங்காயம்- ரூ.15
சின்ன வெங்காயம்-ரூ.50
உருளைக்கிழங்கு-ரூ.18
உஜாலாகத்திரிக்காய்-ரூ.20
வரி கத்திரிக்காய்-ரூ.15
வெண்டைக்காய்-ரூ.20
அவரைக்காய்-ரூ.10
முருங்கைக்காய்-ரூ.20
பீன்ஸ்-ரூ.50
ஊட்டி கேரட்ரூ.25
கேரட்-ரூ.10
பீட்ரூட்-ரூ.13
கோவாக்காய்-ரூ.15
பாகற்காய்-ரூ.15
புடலங்காய்-ரூ.15
பீர்க்கங்காய்-ரூ.20
வெள்ளரிக்காய்-ரூ.10
கொத்தவரங்காய்-ரூ.10
பூசணிக்காய்-ரூ.6
முட்டை கோஸ்-ரூ.4
முள்ளங்கி-ரூ.5
நூக்கல்-ரூ.8
காலிபிளவர் ஒன்று-ரூ.10
இஞ்சி-ரூ.22
பச்சை மிளகாய்-ரூ.20