செய்திகள்
போலீசார் விசாரணை

பெற்றோர் கைவிட்டதால் மகன், மகள் தற்கொலை முயற்சி- போலீசார் விசாரணை

Published On 2021-04-09 09:59 GMT   |   Update On 2021-04-09 09:59 GMT
தஞ்சை அருகே விவாகரத்து பெற்ற பெற்றோர் கைவிட்டதால் மனமுடைந்த மகன்-மகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். தஞ்சை மாவட்டம் திருவையாறு அல்லூர் பகுதியை சேர்ந்தவர் காந்திமதி. இருவருக்கும் திருமணமாகி 21 ஆண்டுகள் ஆன நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது.

இவர்களுக்கு இந்துமதி(18) என்ற மகளும், கரண்ராஜ்(20)என்ற மகனும் உள்ளனர். 2 பேரும் தாயிடம் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் காந்திமதி தனது மகன் மற்றும் மகளை தந்தையிடம் சென்று விடும்படி அனுப்பி விட்டாராம். இதையடுத்து தஞ்சை கரந்தையில் தந்தை கனகராஜ் வீட்டிற்கு 2 பேரும் வந்துள்ளனர். ஆனால் கனகராஜ் மகன், மகளை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இத்தனை நாட்களாக தாயிடம் இருந்த நீங்கள் சொத்துக்காக தற்போது இங்கே வந்தீர்களா எனக் கூறி திருப்பி அனுப்பி விட்டாராம். இதனால் இந்துமதியும், கரண்ராஜிம் மனமுடைந்தாக கூறப்படுகிறது.

தாயும், தந்தையும் கைவிட்ட நிலையில் எங்கே போய் தங்குவது என தெரியாமல் இருவரும் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதன்பேரில் அங்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News