செய்திகள்
பாளையில் இன்று நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி முதியவர் தற்கொலை மிரட்டல்
பாளையில் இன்று நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி முதியவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
பாளை பர்கிட்மாநகர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பூமாலை (வயது 70). இன்று காலை அவர் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது திடீரென்று ஏறினார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் பாளை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் பாளை தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் தலைமையிலான வீரர்கள் தண்ணீர் தொட்டி மீது ஏறி பூமாலையை பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவருக்கு சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரை எச்சரித்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.