செய்திகள்
ரவிச்சந்திரன்

ரவிச்சந்திரன் விடுப்பை உரிமையாக கோர முடியாது -தமிழக அரசு எதிர்ப்பு

Published On 2021-03-19 12:04 GMT   |   Update On 2021-03-19 12:04 GMT
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்க அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மதுரை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பதாலும், சிறை நன்னடத்தை அலுவலர் பரிந்துரைக்காததாலும் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்க அனுமதிக்க இயலாது என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்க அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சிறையில் உள்ள ரவிச்சந்திரன் விடுப்பை உரிமையாக கோர முடியாது என்று அரசு தெரிவித்தது.

மேலும், கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்க இயலாது என்றும், விடுப்பு வழங்க தகுதிகாண் அலுவலர் பரிந்துரை செய்யவில்லை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, ரவிச்சந்திரன் விடுப்பு கோரிய மனு மீது முடிவு எடுக்க எவ்வளவு காலம் ஆகும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுபற்றி அரசுத் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News