செய்திகள்
திருட்டு

பெரம்பலூரில் மருந்தக குடோனின் பூட்டை உடைத்து ரூ.76 ஆயிரம் திருட்டு

Published On 2021-03-09 06:59 GMT   |   Update On 2021-03-09 06:59 GMT
பெரம்பலூரில் மருந்தக குடோனின் பூட்டை உடைத்து ரூ.76 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பெரம்பலூர்:

திருச்சி மாவட்டம் உறையூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சிவனேசன் (வயது 56). இவர் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் முதல் தளத்தில் வாடகைக்கு அறை எடுத்து, அதில் மருந்தக குடோன் வைத்துள்ளார். மேலும் அங்கிருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளுக்கு மருந்துகள் வினியோகித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு மருந்தக குடோனை, அதன் மேலாளர் பெரம்பலூரை சேர்ந்த இளங்கோ பூட்டிவிட்டு வீடு திரும்பினார். நேற்று காலை அவர் அங்கு வந்து பார்த்தபோது மருந்தக குடோன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது டிராயரில் வைக்கப்பட்டிருந்த ரூ.76 ஆயிரம் மற்றும் 2 செல்போன்கள், அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது, தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மருந்தக குடோன் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டபோது, அதில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரின் உருவம் பதிவாகியிருந்தது. அதனை வைத்து போலீசார் அந்த மர்மநபரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News