செய்திகள்
கட்சி சின்னங்களுடன் முககவசம்

திருப்பூரில் அரசியல் கட்சி சின்னங்களுடன் முககவசம் தயாரிப்பு தீவிரம்

Published On 2021-03-08 22:55 GMT   |   Update On 2021-03-08 22:55 GMT
பாதிப்பு ஏற்பட்ட போது, திருப்பூரில் இருந்து முழுகவச ஆடைகள் மற்றும் முககவசங்கள் திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன
திருப்பூர்:

திருப்பூரில் ஆடை தயாரிப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது, திருப்பூரில் இருந்து முழுகவச ஆடைகள் மற்றும் முககவசங்கள் திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதுபோல் உள்நாட்டிலும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தேர்தல் பணிகள் மாவட்டம் முழுவதும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்கிடையே திருப்பூரில் அரசியல் கட்சி கொடிகள், சால்வைகள், துண்டுகள், தொப்பி போன்ற தயாரிப்புகளும் நடந்து வருகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால், முககவச பயன்பாடு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அரசியல் கட்சி கொடிகளின் வண்ணங்கள் மற்றும் அரசியல் கட்சி சின்னங்களுடன் கூடிய முககவசம் தயாரிப்பு திருப்பூரில் மும்முரமாக நடைபெறுகிறது.

இது குறித்து முககவச தயாரிப்பாளர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கு போட்டியிடும் தொகுதிகளும் ஒதுக்கி வருகின்றன. விரைவில் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இதற்கிடையே தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மீண்டும் முககவசத்தின் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக மாநாடு, தேர்தல் பொதுக்கூட்டம் போன்றவை அரசியல் கட்சிகள் நடத்துவார்கள். அப்போது அவர்களது கட்சி சின்னங்களுடன் முககவசங்கள் தயாரிக்கும் போது, அதனை வாங்கி தொண்டர்களுக்கு வழங்குவாா்கள். இதனால் முககவச விற்பனையும் அதிகமாக இருக்கும். தற்போது அரசியல் கட்சியினரிடம் இருந்து முககவசங்களுக்கு ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கிறது. அதன்படி முககவசம் தயாரிப்பும் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற நாட்களில் மேலும் ஆர்டர்கள் அதிகமாக வரும் என எதிர்பார்த்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News