செய்திகள்
நோய் தாக்கிய கொய்யா பழம்.

ஆண்டிப்பட்டி பகுதியில் கொய்யா மரங்களில் நோய் தாக்குதல்- விவசாயிகள் கவலை

Published On 2021-03-08 14:41 GMT   |   Update On 2021-03-08 14:41 GMT
ஆண்டிப்பட்டி பகுதியில் கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக வெயில் அதிகரித்து வருவதால் கொய்யா மரங்களை நோய் தாக்கியுள்ளது.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளான திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, சித்தையகவுண்டன்பட்டி, சித்தார்பட்டி, வெண்டிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் கொய்யாப்பழங்களை தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வந்து விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வெயில் அதிகரித்து வரும் நிலையில் கொய்யா மரங்களை நோய் தாக்கியுள்ளது. கத்தாள பூச்சி, அம்மை புள்ளி நோயால் கொய்யாகாய்களும், மரங்களும், இலைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கள் மரத்திலேயே கெட்டு விடுகிறது.

கடந்த மாதம் வரையில் ஒரு கிலோ கொய்யாப்பழங்கள் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது. இந்தநிலையில் நோய்தாக்கம் காரணமாக தற்போது ஒரு கிலோ கொய்யாப்பழங்கள் ரூ.15 முதல் ரூ.20 ஆக குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே நோய் தாக்கத்தில் இருந்து கொய்யா மரங்களை காப்பாற்ற வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News