உயர் மின்அழுத்த பாதை அமைக்க எதிர்ப்பு- கிராம மக்கள் போராட்டம்
பணகுடி:
வள்ளியூர் அருகே உள்ள நம்பிபத்து கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தும்பு ஆலை உள்ளது.
இந்த ஆலைக்கு உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல நம்பிபத்து ஊர் வழியாக மின் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட தாக கூறப்படுகிறது. அவ்வாறு உயர் அழுத்த மின்பாதை அமைத்தால் கிராமத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என கூறிய பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மக்களுடன் போலீசார், மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கிராமம் வழியாக உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லப்படாது என அதிகாரிகள் கூறியதை ஏற்று அப்போது மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் அதேகிராமம் வழியாக மீண்டும் உயர் மின்அழுத்தம் பாதை அமைப்பதற்கான பணிகள் மின்வாரிய ஊழியர்கள் மூலம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த மக்கள் இன்று அங்குள்ள கோவில் அருகே திரண்டு தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமம் வழியாக உயர்மின் அழுத்தம் பாதை அமைக்கும் பணிகளை கைவிடாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.