துடியலூர் அருகே 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய காய்கறி கடைக்காரர் கைது
கவுண்டம்பாளையம்:
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த வெள்ளக்கிணர் பாரதி வீதியைச் சேர்ந்தவர் சிவகுமரேசன் (வயது 40).
இவர் அந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி விட்டது. குழந்தைகள் இல்லை.
இவர் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருடன் நட்பாக பழகி வந்தார். அந்த குடும்பத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி இருந்தார். சிறுமியுடன் சிவகுமரேசன் நெருங்கி பழகி வந்தார். ஏற்கனவே அறிமுகம் ஆனவர் என்பதால் சிவகுமரேசன் சிறுமியுடன் பழகுவதை அந்த குடும்பத்தினர் தவறாக நினைக்கவில்லை.
இதனை பயன்படுத்திக் கொண்ட சிவகுமரேசன், ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை அவர் கற்பழித்தார். இதில் சிறுமி 3 மாத கர்ப்பமானார். அதன்பிறகே சிவகுமரேசன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவகுமரேசனை கைது செய்தார். இந்த சம்பவம் வெள்ளக்கிணர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.