செய்திகள்
தற்கொலை

மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2021-02-26 12:15 GMT   |   Update On 2021-02-26 12:15 GMT
மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவனியாபுரம்:

மதுரை சிந்தாமணி ரிங்ரோடு அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தவர் சஷ்யா (வயது 21).

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவரது தந்தை பிரைட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.

இந்த நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி சஷ்யா தனது தாய் கலாவுடன் கல்லூரிக்கு எதிரே உள்ள தனியார் குடியிருப்பில் வீடு எடுத்து குடியிருந்து வந்தார்.

சம்பவத்தன்று மாணவியின் தாய் கலா சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இரவு 12 மணிக்கு மேல் மகளுக்கு கலா போன் செய்தார். ஆனால் நீண்ட நேரமாக செல்போனில் ரிங் சென்று கொண்டிருந்தது. சஷ்யா அதை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த கலா அருகில் இருந்த சஷ்யாவின் தோழிகளுக்கு போன் செய்தார். இதையடுத்து தோழிகள் சஷ்யா வீட்டுக்கு வந்து பார்த்தனர். அங்கு சஷ்யா ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மற்றொரு சாவி மூலம் வீட்டை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் மாணவி சஷ்யா உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், தந்தை இறந்ததில் இருந்து சஷ்யா தினமும் இரவு தூங்காமல் அழுது கொண்டிருந்ததாகவும், அவர் இல்லாததால் கல்லூரி கட்டணத்தை கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் எண்ணி வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மாணவி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அதில், தந்தை இல்லாததை நினைத்து மனமுடைந்து இருந்து வந்ததாக எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News