செய்திகள்
புதுச்சத்திரம் பகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
புதுச்சத்திரம் பகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.
நாமக்கல்:
இந்திய தேர்தல் ஆணையம் கொரோனா பாதிப்பு ஏற்படாதிருக்கும் வகையில் 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து ஆண், பெண் வாக்குச் சாவடிகளாக அமைத்திட அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 2,049 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செல்லப்பம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி, தத்தாத்திரிபுரம் உயர்நிலைப்பள்ளி, மின்னாம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கரையான்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாப்பிநாயக்கன்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வாக்குச்சாவடிகளில் காற்றோட்ட வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தள வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், வனிதா உள்பட தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.