செய்திகள்
கன்னியாகுமரி கடற்கரையில் காதல் ஜோடி வலம் வந்ததை காணலாம்

காதலர் தினத்தையொட்டி சுற்றுலா தலங்களில் குவிந்த காதல் ஜோடிகள்

Published On 2021-02-15 09:07 GMT   |   Update On 2021-02-15 09:07 GMT
காதலர் தினத்தையொட்டி சுற்றுலா தலங்களில் காதல் ஜோடிகள் குவிந்தனர். அங்கு உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
கன்னியாகுமரி:

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14- ந் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காதலர் தினம் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் நேற்று காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது. இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர்.

கன்னியாகுமரி கடற்கரையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதி, சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலை, பேரூராட்சிக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைப்பகுதி, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் போன்ற பகுதிகளில் நேற்று காலை முதல் காதல் ஜோடியினர் குவிய தொடங்கினர். அவர்கள் ஒருவரை ஒருவர் கரம் கோர்த்தபடியும், தோளில் கை போட்டபடியும் வலம் வந்தனர்.

கடற்கரையில் நின்றவாறு விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பின்னணியில் தெரியும்படி செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கடற்கரையில் உள்ள சங்கு கடைகளில் காதலர்கள் பலர் கூடி தங்கள் பெயர்களை கடல் சங்கில் பதிவு செய்து வாங்கிச் சென்றதையும் காண முடிந்தது. இதேபோல ஒரே அரிசியில் இருவர் பெயரையும் பதிவு செய்து அவற்றை ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களாக வழங்கி மகிழ்ந்தனர். மேலும், பரிசு பொருட்கள், ரோஜா பூக்களை பரிமாறி அன்பை வெளிப்படுத்தினர். இதனால் பரிசு பொருட்கள் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து நேற்று ஏராளமான காதல் ஜோடிகள் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் கடற்கரை சாலையில் உற்சாகமாக வலம் வந்தனர். காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து வந்து அத்துமீறும் காதலர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கன்னியாகுமரியில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று வெளிநாட்டு காதலர்கள் அதிக அளவில் வருவார்கள். அவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தும் விதமும் வித்தியாசமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டு பயணிகள் யாரும் கன்னியாகுமரிக்கு வரவில்லை.

இதுபோல், சொத்தவிளை, சங்குத்துறை, திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும், பூங்காக்களிலும் காதல் ஜோடிகள் வலம் வந்தனர்.
Tags:    

Similar News