குஜிலியம்பாறையில் இன்று கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
குஜிலியம்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள டி.கூடலூர் குப்பிமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் கவிபாரதி (வயது 15). 10-ம் வகுப்பு படித்து வந்தார். மடையப்ப நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கேசவன் மகன் மதிவாணன் (15). இவரும் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று மாலை விளையாடச் சென்றனர். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இரவு வரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த அவரது பெற்றோர்கள் இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இன்று காலை ஊருக்கு அருகே உள்ள கரும்பாறை குளம் பகுதியில் மாணவர்களின் சைக்கிள்கள் மற்றும் அவர்களது உடைகள் கிடந்தன. சந்தேகமடைந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, இருவரும் அங்குள்ள குட்டையில் பிணமாக மிதந்தனர்.
மீன் பிடிக்க செல்வதற்காக இங்கு வந்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேக மடைந்துள்ளனர். 2 பேர்களின் உடல்களை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.