செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

நர்சு வீட்டில் 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

Published On 2021-02-15 01:14 GMT   |   Update On 2021-02-15 01:14 GMT
நர்சு வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
செங்குன்றம்:

சென்னையை அடுத்த புழல் அந்தோணியார் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் ஓமணா (வயது 56). இவர், மாதவரம் பால் பண்ணையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டைபூட்டிவிட்டு ஆவடியில் உள்ள நடன பயிற்சி பள்ளிக்கு தனது மகளை அழைத்துச் சென்றார். இரவு வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. ஓமணா, தனது மகளுடன் வெளியே செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசையை காட்டி உள்ளனர்.

இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News