செய்திகள்
திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர்:
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற காலத்தை பணிக் காலமாக கணக்கிட்டு பணி ஒழுங்குபடுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை உடனே வழங்க வேண்டும், உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை பொதுசெயலாளர் மதிவாணன், நிர்வாகி மாயவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.