செய்திகள்
திருவாரூர் அருகே வாயில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் போராட்டம்
திருவாரூர் அருகே பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருவதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. எனவே பெட்ரோல்- டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி மவுன போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நபி தலைமை தாங்கினார். சி.ஜ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, மாவட்ட துணை செயலாளர் பழினிவேல், மாவட்ட துணை செயலாளர் வைத்தியநாதன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அனிபா, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.