செய்திகள்
திண்டிவனத்தில் அடிக்கடி விபத்து நடந்த இடத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் பார்வையிட்ட காட்சி

திண்டிவனம் பகுதியில் விபத்தை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு

Published On 2021-02-05 14:47 GMT   |   Update On 2021-02-05 14:47 GMT
திண்டிவனத்தில் அடிக்கடி விபத்து நடந்த இடத்தை திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திண்டிவனம்:

திண்டிவனம் நகரை சுற்றிலும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளதால் தினமும் விபத்து நடக்கிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் விபத்து குறைந்தபாடில்லை.

குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செண்டூரில் இருந்து ஓங்கூர் சுங்கச்சாவடி வரை முக்கிய சந்திப்புகளில் ஏற்படும் விபத்தை தடுப்பதற்காக பேரி கார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் விபத்து நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கடந்த மாதத்தில் மட்டும் திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் நடந்த சாலை விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் அரசு பஸ் மோதி்யதில் 2 வாலிபர்கள் இறந்தனர்.

தொடர் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

அதன்படி திண்டிவனம் போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், போக்குவரத்து ஆய்வாளர் முருகவேல், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய மேலாளர் தீனதயாளன், நெடுஞ்சாலை உதவி பொறியாளர் குரு ஆகியோர் திண்டிவனம் பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு் செய்தனர். பின்னர், விபத்தை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.
Tags:    

Similar News