செய்திகள்
பரமசிவத்திடம் போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்த படம்.(உள்படம்: பரமசிவம் கொண்டு வந்த மண்எண்ணெய் கேன்)

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த முதியவர்

Published On 2021-01-28 11:37 GMT   |   Update On 2021-01-28 11:37 GMT
பொதுப்பாதையில் உள்ள சுவரை அகற்றக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை ஆண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக கையில் மண்எண்ணெய் கேனுடன் வந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை பிடித்து, அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் (வயது 70) என்பதும், அவர் பெட்டிக்கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.

மேலும் லாடபுரத்தில் உள்ள அவருக்கு சொந்தமான கூரை வீட்டை இடித்து விட்டு, அந்த இடத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். அதன் அருகே உள்ள பொதுப்பாதையில் 2 பேர் ஆக்கிரமிப்பு செய்து, சிலர் உதவியுடன் அங்கு சுமார் 10 அடி உயர சுவர் கட்டி, அவரை அந்த பாதையில் நடக்கவிடாமலும், வீடு கட்டும் பணியை தடுத்து வருவதாக தெரிகிறது.

அந்த சுவரை அகற்றி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரமசிவம் பலமுறை மனு கொடுத்தும், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதனால் மனமுடைந்த பரமசிவம் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததும், விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து, பரமசிவம் அங்கிருந்து சென்றார்.
Tags:    

Similar News