செய்திகள்
ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் அருகே உள்ள பொடியனூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ராஜன் (வயது 25). இவர் நெல்லை அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூருக்கு தனது சித்தி வீட்டு கிரகபிரவேசத்திற்க்கு சென்று விட்டு இரவு அங்கேயே தங்கியுள்ளார்.
நேற்று காலையில் அதே ஊரில் உள்ள பம்பு செட்டு கிணற்றுக்கு சென்று குளித்துள்ளார். குளித்து முடித்ததும் தனது துணிகளை அருகிலுள்ள கம்பியில் காய போடும்போது எதிர்பாராதவிதமாக அவருடைய ஈரத்துணி அருகிலிருந்த மீட்டர் பெட்டியின் மீது பட்டதாகவும், இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ராஜன் உயிருக்கு போராடியதாகவும் கூறப்படுகிறது.
அவரை உறவினர்கள் மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ராஜனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.