செய்திகள்
முத்துப்பேட்டை அருகே பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் பறிமுதல்
முத்துப்பேட்டை அருகே கடற்கரையோர சதுப்பு நிலகாட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான மஞ்சளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவை இலங்கைக்கு கடத்த பதுக்கப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகள் கடத்தப்படுவதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கியூ பிராஞ்ச் துணை சூப்பிரண்டு சிவசங்கர், இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் முத்துப்பேட்டை கடலோர சதுப்புநில காடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சதுப்பு நில காட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 360 கிலோ மஞ்சள் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த மஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இலங்கைக்கு கடத்தி செல்ல மஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டதா? எனவும், இதை யார் பதுங்கி வைத்தார்கள்? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.