செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
திருவாரூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வந்த சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி அவரை பணி ஓய்வில் செல்ல அனுமதிக்க வேண்டும்.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீதான வழக்குகள், குற்றச்சாட்டு குறிப்பானைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வசந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில துணைத்தலைவர் புட்பநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணைத்தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட இணை செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.