செய்திகள்
ஏரியூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
ஏரியூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏரியூர்:
ஏரியூர் அருகே உள்ள ராமகொண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட நல்லூர் காடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. குடிநீர் வழங்கக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட கிராமமக்கள் நேற்று ஏரியூர்- மேச்சேரி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.