செய்திகள்
மூர்த்தி-கோபி

தோகைமலை அருகே குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி

Published On 2021-01-19 08:37 GMT   |   Update On 2021-01-19 08:37 GMT
தோகைமலை அருகே பொங்கல் பண்டிகை கொண்டாட வந்த அண்ணன், தம்பி குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
தோகைமலை:

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள எட்டாமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் மூர்த்தி (வயது 20). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். முனியாண்டியின் தம்பி ஆறுமுகம் மகன் கோபி (21). இவர் கரூர் மணவாடியில் உள்ள ஒரு தனியார் செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரான எட்டாமநாயக்கன்பட்டியில் கொண்டாடுவதற்காக மூர்த்தியும், கோபியும் வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை மூர்த்தியும், கோபியும் சின்னரெட்டிப்பட்டி மேற்குப்பகுதியில் உள்ள ஆவிக்குளத்திற்கு சென்று குளித்துள்ளனர்.

வெகுநேரம் ஆகியும் மூர்த்தியும், கோபியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவர்களது நண்பர் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் ராமர்(24) குளத்திற்கு சென்று சுற்றுவட்டார பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் மூர்த்தி, கோபி ஆகியோரின் துணிகள் மட்டும் கரையில் கிடந்துள்ளன. மூர்த்திக்கும், கோபிக்கும் நீச்சல் தெரியாதாம். இதனால் சந்தேகம் அடைந்த ராமர் அப்பகுதி பொதுமக்களை அழைத்துள்ளார். இதையடுத்து, குளத்தில் இறங்கி 2 பேரையும் பொதுமக்கள் தேடினர்.

அப்போது தான் மூர்த்தியும், கோபியும் குளத்தில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் உடல்களையும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பொதுமக்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மூர்த்தி, கோபியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த அண்ணன், தம்பி இருவரும் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News