செய்திகள்
வையம்பட்டி அருகே பயிர்களை பாதுகாக்க வேலியான சேலைகள்
வையம்பட்டி அருகே நலிந்து வரும் விவசாயத்தில் இருக்கும் பயிரை காப்பாற்ற சேலையே வேலியாக மாற்றி மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.
வையம்பட்டி:
திருச்சி மாவட்டம், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய பகுதி மக்களின் பிரதான தொழிலே விவசாயம் தான். ஆனால் சமீபகாலமாக போதிய மழையின்றி, நிலத்தடி நீர் முற்றிலுமாக குறைந்து, நீர்நிலைகள் வறண்டு கிடக்கும் நிலை ஏற்பட்டதால் மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறி கூலி வேலைக்கு செல்லும் நிலை இருந்து வருகிறது.
இருப்பினும் நிலத்தடி நீர்மட்டம் உள்ள சில பகுதிகளில் மட்டும் மக்கள் குறைந்த அளவு விவசாயம் செய்து வருகிறார்கள். குறிப்பாக தற்போது பல இடங்களிலும் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்்தநிலையில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்களில் உள்ள நெல்மணிகள் குழை பூச்சி தாக்குதலுக்கு ஆளாகி வீணாகி வருகிறது.
இதுஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் நெல்மணிகளை மயில்கள் வேறு துவம்சம் செய்கிறது. இதனால் விவசாயம் செய்தும் பயனற்று மிகுந்த வேதனைக்கு ஆளான விவசாயிகள், 24 மணி நேரமும் தோட்டத்தை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இதற்காக நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலை சுற்றிலும் சேலைகளை வேலி போல் அதிக அளவில் கட்டி வைத்துள்ளனர். அந்த சேலை காற்றுக்கு ஆடும் போது அங்கு மனிதர்கள் இருப்பதாகவே உணரும் மயில்கள், வயல்பகுதிக்கு செல்வதில்லை. இதனால் நெற்கதிர்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.