செய்திகள்
ராசிபுரம் அருகே விபத்தில் ஊராட்சி மன்ற செயலாளர் பலி
ராசிபுரம் அருகே விபத்தில் ஊராட்சி மன்ற செயலாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:
புதுச்சத்திரம் அருகே உள்ள ராஜா கவுண்டனூரை சேர்ந்தவர் செங்கோட்டுவேல் (வயது 45). இவர் புதுச்சத்திரம் ஒன்றியம் நவனி ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வந்தார். தனது ஊரில் மளிகைக் கடை வைத்தும் நடத்தி வந்தார். இவருக்கு தங்கமணி (40) என்ற மனைவியும், ஹேமலதா (18), நமீதா (16) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மளிகைக்கடைக்கு தேவையான காய்கறிகளை வாங்க மொபட்டில் ராசிபுரம் உழவர் சந்தைக்கு புறப்பட்டு சென்றார். அவர் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகே மூணுசாவடி அருகே உள்ள ஆவுடையார் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த செங்கோட்டுவேல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்