செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 12 மாடுகளை பிடித்த கண்ணனுக்கு கார் பரிசு

Published On 2021-01-16 12:40 GMT   |   Update On 2021-01-16 12:40 GMT
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 719 காளைகள் சீறிப்பாயந்ததில், 12 காளைகளை பிடித்த கண்ணன் என்பவர் முதல் பரிசான காரை வென்றார்.
மதுரை மாவட்டத்தில் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி பொங்கல் அன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெற்றது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது.

போட்டியை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காலை 8.25 மணிக்கு வாடிவாசல் முன்புள்ள திடலுக்கு வந்தனர்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பச்சை கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

முனியாண்டி கோவில் காளை உள்பட 3 கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கக்கூடாது என்பதால் காளையர்கள் ஓரங்கட்டி நின்றனர்.

அதன்பின் மாலை 5 மணி வரை ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. மொத்தம் 719 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்தன; 700 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் 12 மாடுகளை பிடித்த கண்ணன் என்ற வீரர் காரை பரிசாக வென்றார்.

9 காளைகளை பிடித்த கருப்பணனுக்கு 2-வது பரிசும், 8 காளைகளை பிடித்த சக்தி என்பவருக்கு 3ம் பரிசும் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News