செய்திகள்
நாமக்கல் அருகே விவசாயி வீட்டில் 14½ பவுன், ரூ.1¾ லட்சம் திருட்டு
நாமக்கல் அருகே விவசாயி வீட்டில் 14½ பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை திருடிக் கொண்டு, காரையும் எடுத்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள வள்ளிபுரத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 60) . விவசாயி. இவரது மகன் குமரவேல் (29). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் குமரவேல் மோகனூர் அருகே பெரமாண்டம்பாளையத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார்.
அவரது தந்தை பொன்னுசாமி தோட்டத்திற்கு சென்று விட்டார். அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த மர்ம நபர்கள் வீட்டு மாடி வழியாக வீட்டுக்குள் புகுந்து, படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்து, 14½ பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ஆகியவற்றை திருடி உள்ளனர்.
தொடர்ந்து அங்கிருந்த சாவியை எடுத்து வந்து, பொன்னுசாமிக்கு சொந்தமான காரையும் திருடிக் கொண்டு அதில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்த குமரவேல், பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் திருடப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பொன்னுசாமி நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.