செய்திகள்
36 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறப்பு: தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேறுவதால் தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலையும் நெல்லை, பாளை, தூத்துக்குடி மற்றும் கடலோர பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை கொட்டியது.
பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியதால் தாமிரபரணி ஆற்றில் 36 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாளையில் மனகாவலன் பிள்ளை நகர், கே.டி.சி. நகர் புறநகர் பகுதி, மேல குலவணிகர்புரம், மீனாட்சி புரம் வேடுவர் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வெள்ளம் காரணமாக தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என்றும், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக முன் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இரண்டு அணைகளிலும் இருந்து அதிகமான நீர் திறந்து விடப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் பாதுகாப்பு குழுவினர் நெல்லை விரைந்துள்ளனர்.