செய்திகள்
பூதலூரில் 100 நாள் வேலை கேட்டு சாலை மறியல்
பூதலூரில் 100 நாள் வேலை கேட்டு மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் (100 நாள்வேலை) தங்களுக்கு வழங்க கோரி பாரி காலனி பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாரி காலனி, பெரியார் புரம், அகிலாண்டேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் இந்த சாலை மறியலில் கலந்து கொண்டனர். இதனால் திருக்காட்டுப்பள்ளி செங்கிப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த பூதலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீசுஜாதா ஆகியோர் மறியல் நடைபெற்ற இடத்துக்கு சென்று மறியலை நடத்திய மக்கள் உரிமை கூட்டமைப்பு நிர்வாகிகள் வீரசிங்கம், ராஜ்குமார் மற்றும் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கோரிக்கைகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலிப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதன் பேரில் சாலை மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர். முன்னதாக நேற்று முன்தினம் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணி வழங்க கோரி பூதலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.