செய்திகள்
பண மோசடி

இணையதளத்தில் பரிசு விழுந்திருப்பதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி

Published On 2021-01-08 07:47 GMT   |   Update On 2021-01-08 07:47 GMT
இணையதளம் மூலம் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி, பரமக்குடியைச் சேர்ந்தவரை ஏமாற்றி ரூ.11 லட்சம் மோசடி செய்ததாக, மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சென்குப்தா தெருவை சேர்ந்தவர் நந்தகுமார். மருந்து விற்பனை பிரதிநிதி. இணையதள நிறுவனம் மூலம் அடிக்கடி வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கினார்.

இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இணையதள நிறுவனத்தில் இருந்து கடிதம் வந்தது. அதில், அவரது 10-வது திருமண நாளை முன்னிட்டு நடந்த குலுக்கலில் பெருந்தொகை பரிசாக விழுந்திருப்பதாகவும், அதைப்பெற வரி உள்ளிட்டவற்றுக்காக வங்கிக்கணக்கில் பணம் செலுத்தவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

உடனே நந்தகுமார் இணையதள நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொண்டார். அதன் பின்னர் இணையதள நிறுவனம் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.11 லட்சம் வரை செலுத்தினார். அதன் பிறகும் பரிசு அனுப்பி வைக்கப்படவில்லை.

இதுகுறித்து கேட்ட போது, அவருக்கான பரிசு ரத்து செய்யப்படும் என வாடிக்கையாளர் சேவை பிரிவில் இருந்தவர்கள் மிரட்டினர்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நந்தகுமார் இது குறித்து ராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் குறிப்பிட்ட இணையதள நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவைச் சேர்ந்த கொண்டாரப்பு சேகர், சுஜாந்தா மண்டல், தாஸ்மித்ரா, சதாம் பெகாடா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News