செய்திகள்
புத்தாண்டையொட்டி மது விற்ற 285 பேர் கைது
புத்தாண்டையொட்டி மது விற்ற 285 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை படுஜோராக நடைபெற்றது. சில பொதுஇடங்களில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பீளமேடு, காந்திபுரம், உக்கடம், ராமநாதபுரம், போத்தனூர், பேரூர், பெரியநாயக்கன்பாளையம், வால்பாறை, கருமத்தம்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக மாநகர பகுதியில் 89 பேரும், புறநகர் பகுதியில் 196 பேரும் என மொத்தம் 285 பேர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரே நாளில் 600 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.