செய்திகள்
சேலத்தில் கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு
சேலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 5½ பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்று தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் பொன்னம்மாபேட்டை சக்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வெள்ளிப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கல்பனா (வயது 39). மார்கழி மாதம் என்பதால் இவர் சிங்கமெத்தை பகுதியில் உள்ள சவுந்திரராஜ பெருமாள் கோவிலுக்கு நேற்று அதிகாலை மொபட்டில் சென்றார். பின்னர் அவர் கோவில் அருகே மொபட்டை நிறுத்திவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கல்பனா அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார்.
இதையடுத்து அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்து மர்ம நபரை பிடிக்க ஓடினர். ஆனால் அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பின்னர் இதுகுறித்து கல்பனா அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.