செய்திகள்
விபத்து

மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: வாலிபர்கள் உள்பட 3 பேர் பலி

Published On 2021-01-01 11:45 GMT   |   Update On 2021-01-01 11:45 GMT
திருச்சி-தஞ்சை சாலையில் சுங்கச்சாவடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
திருச்சி:

திருச்சி-தஞ்சை சாலையில் சுங்கச்சாவடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி துவாக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திரவியராஜ்(வயது 54). இவர் நேற்று இரவு 8 மணி அளவில் திருச்சி-தஞ்சை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி தஞ்சை நவலூரைச் சேர்ந்த எபின்(21), திருச்சி வாழவந்தான் கோட்டையை சேர்ந்த புஷ்பராஜ்(21) ஆகிய 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து கொண்டிருந்தனர். துவாக்குடி சுங்கச்சாவடியை அடுத்த அசூர் பிரிவுரோடு அருகே வந்தபோது, திரவியராஜ் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அவரது மோட்டார் சைக்கிள் மீது அந்த வாலிபர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். படுகாயமடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரின் உடல்களை கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் திருச்சி-தஞ்சை சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துவாக்குடி பகுதியில் சாலை விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News