செய்திகள்
புறநகர் ரெயில்களில் நேரக்கட்டுப்பாடு இன்றி பெண்கள் பயணிக்கலாம் - தெற்கு ரெயில்வே
புறநகர் மின்சார ரெயில்களில் திங்கட்கிழமை முதல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு உள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
சென்னையில் கொரோனா பரவல் தடுப்புக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட புறநகர் மின்சார ரெயில் சேவையில், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக கூட்டநெரிசல் இல்லாத நேரத்தில் மட்டும் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் நேரக்கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டு பெண்கள் எந்த நேரத்திலும் புறநகர் ரெயிலில் பயணம் செய்யலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அவர்களுடன் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் பயணிக்க அனுமதிக்கப் பட்டுள்ளது.
மேலும், சென்னையிலிருந்து செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருமால்பூர் செல்லும் ரெயில், வரும் திங்கட்கிழமை முதல் இயக்கப்படும் என்றும், சென்னை - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் சுற்றுவட்ட ரெயிலும் திங்கட்கிழமை முதல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.