செய்திகள்
பொங்கலூரில் கார்-மொபட் மோதல்: விவசாயி பலி
பொங்கலூர் அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கலூர்:
பொங்கலூர் அருகே உள்ள உகாயனூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 60). அதே ஊரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (55) . விவசாயிகளான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை பொங்கலூர் வந்துவிட்டு மொபட்டில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பொங்கலூர் பயணியர் விடுதி அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பலத்த காயமடைந்த பழனிசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவரான பாலசுப்பிரமணி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.