செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி தி.மு.க.வினர் சாலை மறியல்

Published On 2020-12-08 12:52 GMT   |   Update On 2020-12-08 12:52 GMT
கூத்தாநல்லூர் அருகே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க வேண்டும். நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூத்தாநல்லூர் அருகே உள்ள கமலாபுரத்தில் தி.மு.க.வினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தி.மு.க.மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தலையாமங்கலம் பாலு மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் தாசில்தார் ஜீவானந்தம், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News