செய்திகள்
மன்னார்புரத்தில் நேற்று இரவு மழை பெய்த போது மின்னொளியில் தெரிந்த காட்சி.

திருச்சியில் தொடர்ந்து சாரல் மழை- காந்தி மார்க்கெட் வியாபாரம் பாதிப்பு

Published On 2020-12-03 10:01 GMT   |   Update On 2020-12-03 10:01 GMT
திருச்சி மாவட்டத்தில் புரெவி புயல் எதிரொலியாக தொடர்ந்து சாரல் போல மழைத்தூறிக் கொண்டே இருந்தது. இது நள்ளிரவுக்கு மேலும் நீடித்தது.
திருச்சி:

வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது ‘புரெவி‘ புயலாக உருவெடுத்துள்ளது. நாளை புரெவி புயலானது கன்னியாகுமரி- பாம்பன் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதலே சூரியன் முகமே தெரியாத வகையில் வானத்தில் கருமேகக் கூட்டங்கள் காணப்பட்டன.

இதனால், குளிர்ந்த சீதோஷ்ணமே நிலவியது. மேலும் அவ்வப்போது சாரல் போல மழைத்தூறிக்கொண்டே இருந்தது. திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து சாரல் போல மழை தூறிக்கொண்ட நிலையே நீடித்தது. சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் குடை மற்றும் மழை கோர்ட் அணிந்தும் சென்றதை அதிக அளவில் காணமுடிந்தது.

மாலை 6.30 மணியளவில் சில நிமிடங்கள் சற்று மிதமான மழை பெய்தது. தொடர்ந்து மீண்டும் நள்ளிரவுக்கு மேலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. திருச்சி மத்திய பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இல்லாமல் இருந்தது.

மேலும் இரவு வேளையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் தற்போது நடந்து வருகிறது. சாரல் மழையால் லாரிகளில் இருந்து காய்கறிகளை மூட்டைகளை இறக்குவதில் தொழிலாளர்கள் பெரும் சிரமப்பட்டனர். மேலும் வியாபாரமும் சற்று பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News