செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - அன்புமணி ராமதாஸ்

பாமக போராட்டம் நடத்திவரும் நிலையில் முதலமைச்சருடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

Published On 2020-12-01 11:29 GMT   |   Update On 2020-12-01 12:51 GMT
இட‌ஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் நடத்திவரும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமியை அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.
சென்னை:

வன்னியர்களுக்கு 20 சதவீத  இடஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சி நடத்தி வரும் போராட்டத்தால் சென்னையில் தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

பல்லவன் இல்லம் அருகே நடந்த போராட்டத்தில் பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்றார். அப்போது பேசிய, அன்புமணி ராமதாஸ் எம்.பி., 'இட ஒதுக்கீடு போராட்டம் அரசியல் பிரச்சினை அல்ல, உரிமை பிரச்சினை' என்றார். 

இட‌ஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் நடத்திவரும் நிலையில்  முதலமைச்சர் பழனிசாமியை அன்புமணி ராமதாஸ் திடீர் என சந்தித்து பேசினார்.அப்போது, வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத  இடஒதுக்கீடு அளிக்க முதல்வரிடம் வலியுறுத்தினார்.

முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த பின் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 20 சதவீத  இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் மனு அளித்துள்ளோம். வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத  இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை போராட்டத்தை அமைதியான வழியில் முன்னெடுக்க பாமக தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறேன்.

எந்த அமைப்புக்கோ, அரசியல் கட்சிக்கோ எதிரான போராட்டம்  இது கிடையாது. தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்கள் மிகமிக பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள்.

எங்களது கோரிக்கை தொடர்பாக நல்ல முடிவை அறிவிப்பேன் என்று முதலமைச்சர் உறுதி அளித்து இருக்கிறார் 

எங்கள் சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக அடையாளப்படுத்த வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன். கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி எங்களது போராட்டம் 40 ஆண்டு காலமாக நீடித்து வருகிறது என கூறினார்.

Tags:    

Similar News